சாகாகலை!!!

சாகாகலை!!!

சாகாகலை!!!

 

🙏

 

விந்தாய் வந்தாய் விந்தை

மனிதா

தனியாய் பிறந்து தவழ்ந்தே

எழுந்தாய்

அணியாய் சேர்ந்தே குழியில்

விழுந்தாய்

 

கடமை மறந்து காற்றாய்

திரிந்தாய்

மூச்சை இழந்து மூர்ச்சை

ஆனாய்

 

இறையது எதுவென்று புரியாது

அதுவேதான் நீயென்று அறியாது

 

வேசமெல்லாம் நீயிட்டு

தேசமெல்லாம் திரிந்தாலும்

 

கண்கட்டி காதடைத்து

பேச்சுத்தட்டி மூச்சுமுட்டி

கூற்றுவந்து கதவுதட்டி

சுற்றம்சூழ சுட்டு பொசுக்கி

 

வந்தவர் மறைவார்

மறுவாழ்வு சிறுவாழ்வு

தொடர்வாழ்வு இடர்வாழ்வு

வாழ வரம்வேண்டி

சென்றவர் வருவார்

 

குருடெல்லாம் கூடி

செவிடோடு பேசி

போக ஊர் தேடி

போகா ஊரடைந்து

 

மதிகெட்டு விதிநொந்து

விந்தாய் வந்தாய் விந்தை

மனிதா

சொத்தாய் சேர்த்தாய்

வேர்த்தே செத்தாய்

 

 

ஊணுள்ளே உறைந்த

வேரே அதுவென்று

அறியாமல் போனாய்

புரியாமல் திரும்பி

விரும்பாமல் வருவாய்

 

வந்தவாசல் அறிந்து

வந்தால்

மீண்டும் வாராது

மீண்டு போவாய்!

 

செசெகு….

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *