சிவவாக்கியம் பாடல் 318 – பழுத்திடான், அழித்திடான் !

சிவவாக்கியம் பாடல் 318 – பழுத்திடான், அழித்திடான் !

318. பழுத்திடான், அழித்திடான், மாய ரூபம் ஆகிடான்.

கழன்றிடான், வெகுண்டிடான், கால கால காலமும்.

துவண்டிடான், அசைந்திடான், தூய தூபம், ஆகிடான்.

சுவன்றிடான், உரைத்திடான், சூட்ச, சூட்ச சூட்சமே!

இறைவனைப் பற்றி கூறுகிறார். பழுத்திடான் , ஆதி அந்தமும் இல்லாதவன், அநாதி எப்பொழுதும் இருப்பவன். பழுக்காதவன். சக்திகள் எப்பொழுதும் இளமையாக கன்னிகளாக இருப்பதால் கன்னிமார்கள் என்கிறோம். பழுத்தால் அழிந்து விடுவான். அழித்திடான், ஊழி என்றால் அழிவல்ல மாற்றம். நிலைபெறுதலுக்கான நிகழ்வு. அவன் அழிக்காதவன். மனிதன் இந்த ஊழ் நடக்கா விட்டால் தன்னைத் தானே விஞ்ஞானம் என்ற பெயரால் அழித்துக் கொள்வான் என்பதால் கடல் இடம் மாறி சரி செய்து கொள்கிறது. மாயரூபம் எல்லாம் எடுக்க மாட்டான். இயல்பாக இயற்கையாக நாம் என்ன பார்க்கிறோமோ அது தான் உண்மை. கழன்று நம்மை விட்டு விட்டு சென்று விடுவானா? என்றால் இல்லை என்கிறார். அவனுக்குள்ளே தான் நாம் இருக்கிறோம். வெகுண்டு எழுவும் மாட்டான். சாட்சியாக நடப்பதை பார்த்துக் கொண்டு இருப்பான். நாம் தான் இயற்கையுடன் இயைந்து ஊழியை வென்று எடுக்க வேண்டும். கால கால காலமும். நடத்துபவனே அவன் , அதனால் துவண்டிடான். அசைந்திடான். அப்படியே நடப்பது நடக்கும். தூய தூபம் ஆகிடான், என்றால் அவனே தூபமாக அநாதியாக இருப்பவன். அவனிடம் மாற்றம் இல்லை. மாற்றம் மாற்றமில்லாமல் அமைதியாகவும், ஆர்ப்பாட்டமாகவும் செல்லும். நாம் தான் எங்கு அமைதியாக கவனிக்க வேண்டுமோ, எங்கு ஒதுங்க வேண்டுமோ, எங்கு எதிர் நீச்சல் போட வேண்டுமோ போட்டு சூழல்களை எதிர் கொண்டு ஊழ்களை வென்றெடுக்க வேண்டும் என்கிறார். எதிலும் கூடவோ, குறைவாகவோ இல்லாமல் எல்லா இடங்களிலும் ஒரே அளவாக சுவன்றிடான், இதைத்தான் செய்ய வேண்டும், இதுதான் சரி, தவறு என்று உரைத்திடான். அதனால் தான் , போரடிக்காமல் இந்த உலகம் வெகு சுவாரசியமாக இயங்குவது போல் உள்ளது. அவன் சூட்ச சூட்ச சூட்சமே என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *